திங்கள், 10 பிப்ரவரி, 2014

சுவிஸ் மக்கள் வாக்களிப்பு குடிவரவைக் கட்டுப்படுத்துவதற்கு ஆதரவாக .

ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்துகொண்டுள்ள மக்களின் சுதந்திர நடமாட்ட ஒப்பந்தத்தில்
இருந்து சுவிட்சர்லாந்து விலக வேண்டுமா என்பது தொடர்பில் அந்நாட்டில் நடந்துள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் ஆம் விலகவேண்டும் என்பதற்கு ஆதரவாக சுவிஸ் மக்கள் வாக்களித்துள்ளனர் .
ஆம் விலக வேண்டும் என்பதற்கு ஆதரவாக 50.5 சதவீதம் முதல் 51 சதவீதம் வரையான வாக்குகள் பதிவாக , மிகக் குறைவான வித்தியாசத்தில் ஆம் விலக வேண்டும் என்ற முடிவு வந்துள்ளது .

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் சுவிட்சர்லாந்துக்குள் விருப்பத்திற்கேற்ப வருவதையும் தங்குவதையும் முடிவுக்கு கொண்டுவந்து முன்பிருந்ததுபோல கடுமையான கோட்டா விதிகளை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக சுவிட்சர்லாந்தில் ஞயிற்றுக்கிழமை நடந்த வாக்குப்பதிவு உள்ளூர் நேரப்படி நண்பகலோடு முடிவுக்கு வந்தது .
சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு இல்லை என்றாலும் ஐரோப்பிய ஒன்றிய கொள்கைகளில் பெரும்பான்மையானவற்றை அந்த நாடும் ஏற்றுக்கொண்டுள்ளது .
ஐரோப்பிய நாடுகள் இடையில் மக்களின் சுதந்திர நடமாட்டத்தை அனுமதிக்கின்ற கொள்கை , ஷெங்கன் ஒப்பந்தம் அடிப்படையில் நாட்டின் எல்லைகளை திறந்துவிடுகின்ற கொள்கை போன்றவற்றையும் சுவிட்சர்லாந்து ஏற்றுள்ளது .

ஐக்கிய பொருட்சந்தையாக திகழும் ஐரோப்பிய ஒற்றைச் சந்தையில் தமக்கும் பங்கு வேண்டும் என்பதற்காக சுவிஸ் இவற்றைச் செய்துள்ளது .
ஆனால் பிற ஐரோப்பிய நாடுகளைப்போலவே குடிவரவு என்ற விவகாரம் சுவிஸ்ஸிலும் முக்கிய அரசியல் விவகாரமாக இருந்துவருகிறது .
திறந்த எல்லைகள் காரணமாக ஏராளமான வெளிநாட்டினர் தொடர்ந்து வந்து குடியேறுவதால் வீட்டுவசதி , கல்வி , மருத்துவம் போக்குவரத்து போன்ற சேவைகள் திணறுவதாகவும் இதனால் கோட்டா முறை கொண்டுவரப்பட வேண்டும் என்றும் மக்களில் ஒரு சாரார் வாதிடுகின்றனர் .

ஆனால் சுவிட்சர்லாந்து பொருளாதாரம் முன்னேற்றப் பாதியில் பயணிக்க மக்களின் சுதந்திர நடமாட்ட அவசியம் என சுவிஸ் அரசாங்கமும் அந்நாட்டின் தொழில்துறைத் தலைவர்களும் வாதிடுகின்றனர் .
எல்லைகளை திறந்துவிட்டால்தான் ஐரோப்பிய ஒற்றைச் சந்தையின் பலன்களை சுவிட்சர்லாந்தால் அனுபவிக்க முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.